Wednesday, March 25, 2009

சம்பத்தின் ‘இடைவெளி’

மரணத்தின் மீதான பயத்தை,கேள்விகளை அதிகரிக்க செய்யும் நாவல் சம்பத்தின் "இடைவெளி".எஸ்.ரா வின் தமிழின் சிறந்த 100 நூல்களை பட்டியலில் இந்நாவலும் உள்ளது. நீண்ட தேடலுக்கு பிறகு படித்த கிடைத்தது.மேலோட்டமாக படித்தால் பெரும் குழப்பம் விளைவிக்கும் கருத்துக்களாக தெரியலாம்.சற்றே தீவிரமான வாசிப்பு தேவை படுகின்றது இதன் சாரத்தை புரிந்து கொள்ள.

நடுத்தர வயதினரான தினகரன் மரணம் குறித்தான அடிப்படை தத்துவத்தை அடைய எடுக்கும் முயற்சிகள் சம்பவங்களின் கோர்வையாக சொல்லப்படுகின்றது.சந்திக்கும் மனிதர்களிடத்தில் மரணத்தின் தத்துவம் குறித்து பேசி,அறிய முயன்று தோற்று போய் தாமே சுய பரிசோதனைகளில் இறங்குகிறார்.30 ஆண்டுகளுக்கு முன்பு நிகழும் இக்கதைகளம் பெரும் அளவில் தற்பொழுதைய நடைமுறைகளோடு மாறி வருகின்றது. வீட்டிலும்,அலுவலகத்திலும்,காபி பாரிலும் விடாது சாவு குறித்த எண்ணங்களோடு உலாவரும் தினகரன் மன நோயாளி என யாவராலும் கேலிக்கு ஆளாகிறார்.

தனது தூரத்து உறவினர் ஒருவரின் மரணத்தினாலும்,விடாது துரத்தும் கனவுகளாலும்,தூக்கு கயிற்றில் சாவை அருகில் கண்டு உணர்ந்து அதை முரண்பாட்டின் இடைவெளி என கண்டடைகிறார்.மரணம் - முரண்பாட்டின் இடைவெளி என்பதை நிருபிக்க சொல்லும் விளக்கங்கள் சற்றே தலை சுற்ற செய்பவை.இடைவெளிகளின் வேறுபாட்டால் வெவ்வேறு வித மரணங்கள் நிகழ்கின்றன.இடைவெளியை அல்லது சாவை வெல்ல முடியுமா?? நிச்சயமாக முடியாது.எனவே முரண்பட்ட இடைவெளியே மரணம் என முடிகின்றது நாவல்.சற்றே குழப்பம் விளைவிக்கும் கருத்துக்கள் நாவல் முழுதும் விரவி இருந்தாலும் ஏதேனும் ஒரு இடத்தில் மரணம் குறித்து நம்மால் ஒரு முடிவிற்கு வர முடிகின்றது.

Sunday, March 22, 2009

தகழியின் "இரண்டு படி" மலையாள மொழிபெயர்ப்பு

எழுத்தாளர் தகழிக்கு அறிமுகம் தேவை இல்லை.மலையாள இலக்கிய உலகில் மிக சிறந்த படைப்புகளை வரிசைப்படுத்தினால் தகழியின் படைப்புகளுள் முதல் பத்து இடத்தில இடம் உண்டு.விளிம்பின் குரலாய் ஒலிப்பது இவரின் படைப்புகள்.செம்மீன்,தோட்டியின் மகனை தொடர்ந்து இவரின் "இரண்டு படி" நாவல் சமீபத்தில் படிக்க கிடைத்தது.குட்ட நாடு என அழைக்கப்படும் கேரள தேசத்தின் சோறு பகுதியின் விவசாய பண்ணை கூலிகளை பற்றிய கதை.தகழியின் எழுத்தில் மிகபிடித்தது பட்டவர்த்தனம்.இந்நாவலும் அது போலவே விவசாய கூலிகளின் சுதந்திரத்திற்கு முந்தைய நிலையின் கொடூரங்களை,பண்ணையார்களின் அதிகார மேம்போக்குதனத்தை விரிவாய் விவரித்து செல்கின்றது.




வயல் வேலையில் கெட்டிக்காரியான சிருதையை பெண் பார்க்கும் படலத்தை விவரித்து தொடங்கும் கதை,நாட்டுபுறங்களின் அழகும்,அறிவும் கடந்து உடல் உழைப்பில் ஆண்களுக்கு சலிக்காத பெண்களுக்கு உள்ள பெருமையை மறைமுகமாய் சொல்லுகின்றது.சிறுத்தையை மணக்கும் பொருட்டு அவளின் தந்தை கேட்கும் பணமும் நெல்லும் தரும் பொருட்டு பண்ணை கூலியாய் பணி சேர்கிறான்.அப்பகுதியின் விவசாயமுறை படிப்பதிற்கே அதிர்ச்சியாய் உள்ளது.நீர் நிறைந்த ஏரிகளில் வரப்பு கட்டி உள்ளுள்ள நீரை வெளியேற்றி விவசாயம் செய்ய தயார் செய்து பின் நெற்பயிர் விளைவிக்க பறை கூலிகள் மெனக்கிடும் காட்சிகளின் விவரிப்புகள் கற்பனையிலும் நினைத்து பார்க்க இயலாதது.

கோரன் தனது பண்ணையாரின் நிலத்தில் இரவு பகல் பாராது உழைத்தும் இறுதியில் கிடைக்கும் கூலியை கண்டி அதிர்ச்சி அடைகின்றான்.எதிர்த்து கேட்க வழியின்றி மருகும் கோரன் முடிவாக விவசாய கூலிகளின் நலன் காக்கும் சங்கத்தில் இணைத்து புரட்சி இயக்கத்தில் பங்கு கொள்கின்றான்.நாவலின் பின்பகுதி பெரும்பாலும் அக்காலகட்டத்தின் விவசாய புரட்சி,அரசியல் நிலைப்பாடு,அரசின் ஒடுக்குமுறை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

பறை பல்ல கூலிகளின் வாழ்கை நிலையை துணிகரமாய் சொல்லுவதோடு மட்டும் இல்லாது இந்நாவல் அழுத்தமாய் பதிவு செய்யும் மற்றொன்று கோரன்-சிருதை இவர்களின் மெய் காதல்.துன்பத்தின் பிடியில் இருக்கும் கணங்களிலும் இருவரின் அன்பும்,பிரியமும் குறையாது எதிர்காலம் குறித்த கனவுகள் சுமந்து தொடர்கின்றது இவர்களின் நாட்கள்.டி.ராமலிங்கத்தின் நேர்த்தியான மொழிபெயர்ப்பில் சாகித்திய அகாதமியால் வெளியிடபட்டுள்ள இந்நாவல் வாசிக்க பட வேண்டிய ஒன்று.

வெளியீடு - சாகித்திய அகாதமி

Friday, March 13, 2009

லேலா - ஈரானிய திரைப்படம்.

குத்து பாட்டு,மொக்கை திரைப்படங்கள்,இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.......என அனேக தமிழ் தொலைக்காட்சிகள் விடாது இம்சித்து கொண்டிருக்க மிக சிறப்பான பல நிகழ்ச்சிகளை சத்தமின்றி கொடுத்து வருகின்றது மக்கள் தொலைக்காட்சி.கிராமப்புற நிகழ்வுகள்,தெரு கூத்து,எழுத்தாளர்களுடன் உரையாடல்,இலக்கியசந்திப்புகள்,உலக சினிமா என பெரிதும் தனித்துவம் கொண்டு விளங்குகின்றது.இவற்றுள் ரோட்டோர சிறார்களின் விருப்பத்தை நிறைவும் செய்யும் நிகழ்ச்சி மிகுந்த மனநிறைவை தருவதாய் இருக்கும்.சமீபத்தில் இத்தொலைக்காட்சியில் ஈரான் நாட்டு திரைப்படமான "லேலா" பார்க்க நேர்ந்தது.



சற்று சிக்கலான கதை களத்தை வெகு இயல்பாய் எடுத்தாளுகின்றது இத்திரைப்படம்.குழந்தை பெற்று கொள்ள இயலாத லேலா தனது கணவனுக்கு தானே பெண் பார்த்து மறுமணம் முடித்து வைக்க எடுக்கும் முயற்சிகளும்,அதை தொடர்ந்து உள்ளாகும் மன உளைச்சல்களும் நேர்த்தியாய் சொல்லப்பட்டுள்ளது.ஈரான் போன்ற கட்டுகோப்பான சமூக அமைப்பில் குடும்பங்களுக்குள்ளான நிகழ்வுகள்,பெண்களின் நிலை போன்றவை நம்மில் இருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கவில்லை.

மகிழ்ச்சியாய் செல்லும் திருமண நாட்கள்,லேலாவிற்கு துன்பம் தர தொடங்குவது குழந்தை குறித்தான ஏக்கம் மேலிடும் பொழுது.கணவனின் எதிர்ப்பை மீறி அவனிற்கு பெண் பார்க்க சம்மதிக்கிறாள்.விளையாட்டாய் தொடங்கும் பெண் பார்க்கும் படலம் லைலாவிற்கும் அவள் கணவனிற்கும் கேலியாய் தெரிகின்றது.பார்த்து வந்த பெண்களை குறித்து கிண்டலாய் அவன் சொல்வதை கேட்டு புன்னகை செய்யும் லேலா,இறுதியில் ஒரு பெண்ணை தனக்கு மிக பிடித்திருப்பதாய் அவன் கூறும் தருணத்தில் தனிமையை உணர தொடங்குகிறாள்.மெல்ல மெல்ல தனக்கு நேர போகும் பிரிவை நினைத்து லேலாவின் உடல்நிலை மோசமாகிறது.

லேலாவின் மீது மிகுந்த காதல் கொண்ட அவளின் கணவன் வற்புறுத்துதலின் பேரால் செய்யும் மறுமணம் நீடித்ததா,கணவனை விட்டு பிரிந்த லேலாவின் நிலை என்ன என்பதை மெல்லிய அதிர்வுகள் கொண்டு சொல்லி முடிகின்றது கதை.லேலா வாக நடித்துள்ள நடிகை மெல்லிய புன்னகையும்,சோகத்தை கூட்டும் இறுக்கத்தையும் வெகு இயல்பாய் வெளிக்காட்டுகின்றார்.காட்சிகளின் வேகத்தை கொஞ்சம் அதிகரித்து இருக்கலாம்,விருது படங்களுக்கே உரிய நிரந்தர குறைபாடு இது.எனினும் நல்ல திரைஅனுபவம்.தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் என்பதே பெரும் ஆறுதல்.

Tuesday, March 10, 2009

பாவண்ணனின் "நூறு சுற்றுக்கோட்டை" - கன்னட மொழிபெயர்ப்பு

மொழி,இனம்,பிரதேசங்கள் கடந்து உலவும் கதைகள் தலைமுறை தலைமுறையாய் மாற்றங்கள் பல கண்டும் இன்றும் நிலைத்திருப்பது பகிர்தலின் பொருட்டே.கதைகளின் பகிர்தல் குறித்து நீண்டதொரு முன்னுரையோடு பாவண்ணன் மொழிபெயர்த்திருக்கும் கன்னட கதைகளின் தொகுப்பிது.கன்னட இலக்கிய உலகில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளின் மொழியாக்கம்,மறைந்த பிரபல கன்னட எழுத்தாளர்களை குறித்தும்,மிக சிறந்த நாவல்களின் சிறு பகுதியும் வெகு நேர்த்தியாய் தொகுக்கப்பட்டுள்ளன.

கன்னட எழுத்தாளர்களில் யு.ஆர்.அனந்தமூர்த்தி மட்டுமே எனக்கு நன்கு பரிட்சயம்.இவரின் சம்ஸ்காரா,அவஸ்தை,கடஷ்ரதா நாவல்கள் முன்வைக்கும் முற்போக்கு சிந்தனைகள் முக்கியமானவை. இவரின் "சூரியனின் குதிரை" சிறுகதை இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.பால்ய கால நண்பனை சற்றும் எதிர்பாரா நிலையில் சந்திக்க நேர்ந்த தனது அனுபவங்களை காட்சிகளாய் விவரித்துள்ளார்.ஏழ்மையை பொருட்படுத்தாது,வெகுளியாய் தினப்படி பொழுதை கதைகளோடும்,கற்பனைகளோடும் கடக்கும் நண்பனின் கதாபாத்திரம் அரிதாய் காணமுடிவது.யஷ்வந்த் சித்தாளின் "பயணம்" நவீன பாணி கதையாடல்.விற்பனை பிரதிநிதி ஒருவனின் மரணத்திற்கு முந்தைய பொழுதின் காட்சிகள் நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை மொகள்ளி கணேஷின் "காளி",தலித் இலக்கிய வகை சார்ந்த இக்கதை எனக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்று,இந்தியாவின் எல்லா பகுதியிலும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையும்,அவர்களின் வாழ்க்கை முறையும்,தலித் குழந்தைகளுக்கான நிறைவேற கனவுகளும் ஒன்றே என்று.இந்த ஒரு சிறுகதை மொழிபெயர்ப்பு என்பதை முற்றிலுமாய் மறக்கடிக்க செய்தது.இவை தவிர்த்து சிந்தாமணி கொட்லகெரே வின் "வசிட்டர் குகை" மற்றும் வெங்கடேஷின் 'சின்ன சிறு விஷயம்" சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை.

அணையாத சுடர்கள் என்னும் தலைப்பின் கீழ் வாழ்ந்து மறைந்த கன்னட எழுத்தாளர்கள் மூவரை குறித்து விவரித்துள்ளார் ஆசிரியர்.கொள்கைகளின் பொருட்டு விருதுகளை திருப்பி அனுப்பிய சிவராம கரந்த் கன்னட எழுத்துலகில் கொண்டிருந்த மதிப்பு படிப்பதற்கே பிரம்மிப்பாய் உள்ளது. இலக்கியம்,சினிமா,நாடகம்,பத்திரிகை,அரசியல் ஆய்வாளர் என பன்முகம் கொண்டு விளங்கிய லங்கேஷ் மற்றும் தி.ஆர்.நாகராஜ் பற்றிய குறிப்புகளும் சுவாரஸ்யம் கூட்டுபவை.ஆறுகளின் தடம் என்னும் தலைப்பின் கீழ் சிவராம கரந்த் மற்றும் லங்கேஷின் நாவல்களில் இருந்து சிறு பகுதிகளை மொழிபெயர்த்தும் தொகுத்துள்ளார்.

வெளியீடு - அன்னம்
விலை - 110 ரூபாய்