Monday, May 25, 2009

வண்ணதாசன் சிறுகதைகள்....

வண்ணதாசன்,தொடர்ந்து என்னை தமிழ் இலக்கியம் படிக்க ஆவலை தூண்டிய எழுத்துக்கள் இவருடையது.தமிழ் இலக்கிய உலகில் சத்தமாய் தம் படைப்புக்களை பதிவு செய்ததில் ஜெயகாந்தன்,புதுமைப்பித்தனின்,சு.ரா ஒரு வகை எனில்..தி.ஜா,கி.ரா, வண்ணதாசன்,வண்ணநிலவன்,எஸ்.ராவின் எழுத்துக்கள் அமுங்கிய குரலில் வாழ்க்கை எதார்த்தத்தை பதிவு செய்பவை.குழப்பமான மனநிலையிலோ,வெறுமையான பொழுதுகளிலோ எனது முதல் தேர்வு இவரின் சிறுகதைகள்.கூச்சலும்,எந்திரதனமும் பெருகிவரும் இந்நாட்களில் அமைதியான உலகிற்கான தேவை அதிகரித்து வருகின்றது.அந்த வகை சூழலுக்குள் வாசகனை கூட்டி செல்ல வல்லவை வண்ணதாசனின் கதைகள்.




வாதாம் மரங்கள் குறித்த முதல் அறிமுகம் வண்ணதாசனின் கதைகள் மூலமே எனக்கு கிடைத்தது.வாதாம் மரம் குறித்து ஆச்சர்யத்துடன் வீட்டில் விசாரித்தது நினைவிற்கு வருகின்றது.சில வர்ணிப்புகள் பார்த்திடா பொருட்களின் மீதான ஆவலை அதிகரிக்க செய்பவை."ஒரு வாதாம் இலை ஒரு நீலச்சிறகு" சிறுகதை கணவன் மனைவிக்கு இடையேயான அன்யோனியத்தை அழகாய் சித்தரிக்கின்றது.குற்றாலம் - அருவிகளின் இரைச்சலும்,மனதை வருடும் சாரலும்,குளிர் தென்றலோடு எண்ணெய் பிசுபிசுப்பு மணமும் கலந்து ஒருவித சௌதர்யத்தை ஏந்தி நிற்கும் ஊர்."ஒரு அருவியும் மூன்று சிரிப்பும்" - சிறுகதை குற்றால அருவி ஒன்றின் அருகில் எண்ணெய் கடை வைத்திருப்பவரை பற்றிய கதை.நித்தம் கடையில் முகம் சுளித்து வியாபாரம் செய்யும் அவர் சிறு நஷ்டத்திற்கு பிறகு அருவியில் குளிக்கும் சுகத்தை உணர்ந்து கடையை சாத்திவிட்டு புறப்படுவதை நகைச்சுவை கூட்டி சொல்லும் கதை.

"சொர்க்கத்திற்கு வெளியே கொஞ்சம் நரகம்",அலுவலகத்திலும்,நண்பர்களிடத்திலும் பகட்டாய் சுகவாசி போல பேசி திரியும் சிலரின் வீட்டு நிலை மோசமாய் இருப்பதை பேச்சில் அறிய முடியாது.இக்கதை நாயகன் தாஸ் அதுபோலவே பகட்டு பேர்வழி.அலுவலகத்தில் எப்போதும் சுத்தம் குறித்து பேசிக்கொண்டும்,மின்சாரம் இல்லாத நேரங்களில் அலுத்து கொள்ளும் தாஸ் இரவில் வீட்டில் ஆடு,மாடுகளுக்கு மத்தியில் உறங்கி போகும் காட்சிகளின் விவரிப்புகள் சிரிப்பை வரவைப்பவை."பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக",கதையின் சாரத்தை வெகு அழகாய் சொல்லும் தலைப்பு.வேலை தேடி கொண்டிருக்கும் இளைஞன் ஒருவனின் மனநிலை பண்டிகை நாளில் எப்படி இருக்கும்?தாழ்வு மனப்பான்மையும்,கொஞ்ச குற்ற உணர்ச்சியும் சேர்ந்து இயல்பை மாற்றி பண்டிகை குதூகுலத்தில் இருந்து தனித்து விட செய்வதை வெகு அழகாய் சொல்லி இருக்கும் கதை.

"சில பழைய பாடல்கள்", இந்த சிறுகதை கோபியின் இடாகினி பேய்கள் தொகுப்பில் ஒரு பகுதியை நினைவுபடுத்தியது.கோபி தான் நட்பு கொண்டிருந்த அலுவலக தோழி குறித்து விரிவாய் எழுதி இருப்பார்,அத்தொகுப்பில். ஆண் பெண் நட்புறவு இன்றைய அலுவலக சூழலில் வெகு இயல்பான ஒன்று.80 களில் இது சாத்தியம் இல்லை.விதவையான அலுவலக தோழியுடனான நாயகனின் நட்பை சொல்லும் கதை இது.."அவனுடைய நதி அவளுடைய ஓடை",சின்ன சின்ன காரியங்களில் கூட அழகை புகுத்தி சிறுகதையாய் நீட்டிக்கும் திறன் வண்ணதாசனுக்கு மட்டுமே உண்டு.முன்பெல்லாம் சாயுங்காலத்தில் பெண்கள் கூடி பேச அமர்ந்து விடுவார்கள்,அதை மையபடுத்திய கதை.தொலைக்காட்சியின் வரவால் அந்த காட்சிகள் இன்றைய சூழலில் சாத்தியம் இல்லை.

இந்த தொகுப்பில் வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளும் அடக்கம். இங்கு குறிப்பிட்டுள்ள சிறுகதைகளில் என்னை கவர்ந்தது அவற்றின் தலைப்புகள்.தலைப்புகள் தேர்வில் கல்யாண்ஜி தெரிகிறார்.வண்ணதாசனின் எழுத்து குறித்து பொதுவான சில எதிர்வினைகள் உண்டு.என்பதுகளிலேயே பின் தங்கிய எழுத்து என்றும்,ஒரு கட்டத்திற்கு மேல் அயர்ச்சி தருபவை என்றும்.ஏனோ அதை நான் எப்பொழுதும் உணர்ததில்லை. சொல்ல போனால் 80 களில் மீதான ஏக்கமும்,பிரியமும் அதிகரிக்க செய்தது ராஜாவின் இசையும்,வண்ணதாசனின் கதைகளுமே!!

வண்ணதாசன் சிறுகதைகள் குறித்த எனது முந்தைய பதிவு

வெளியீடு - புதுமைபித்தன் பதிப்பகம்
விலை - 350 ரூபாய்

Wednesday, May 20, 2009

ஆர்.கே.நாராயணனின் "மால்குடி டேய்ஸ்"

மால்குடி டேய்ஸ் - பலருக்கும் பரிட்சயமான பெயர் இது.முன்பு தொலைகாட்சியில் தொடராய் வந்த ஆர்.கே நாராயணனின் சிறுகதை தொகுப்பு.தமிழ் அளவிற்கு ஆங்கில இலக்கியம் படிக்க ஆர்வம் இருப்பதில்லை.முதல் முயற்சியாய் இந்த சிறுவர் இலக்கியத்தை படித்து முடித்தேன்."மால் குடி" நாராயணனின் கற்பனை கிராமம்,அதன் சூழல்,அதன் மனிதர்கள் இவற்றை மையப்படுத்தி வெகு எளிமையாய் சொல்லபட்டுள்ள கதைகளின் தொகுப்பு.மால்குடி டேய்ஸ் படிக்க துவங்கியதும் சட்டென நினைவில் வந்து போனது பள்ளியில் பாடத்தில் வாசித்திருந்த சரோஜினி நாயுடுவின் "Bazaar's Of Hydrebad' கவிதை.மிக சில வரிகளில் ஐதராபாத்தின் ஜன நெருக்கடி மிகுந்த கடை வீதி ஒன்றை நுட்பமாய் வர்ணித்திருப்பார்.



மால்குடி டேய்சின் கதை நாயகர்களை தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர் எந்த சிரமமும் மேற்கொள்ளவில்லை. தபால்காரர்,ரோட்டோர ஜோசியக்காரர்,அலுவலக காவலர்,மருத்துவர்,ரோட்டோர பலகார கடை வைத்திருப்பவர் என நாம் அன்றாட காண நேரிடும் நபர்களையே மையப்படுத்தி,சிறு கருத்தை வலுயுறுத்துவதாய் உள்ளன இச்சிறுகதைகள்.இத்தொகுப்பை குழந்தைகளுக்கு மட்டும் என ஒதுக்கி விட முடியாது,கற்பனைக்கு மீறிய சாகசங்களோ,மாயஜாலங்களோ ஏதும் இல்லாவிடினும் வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை தாங்கி உலவுகின்றன இக்கதைகள்.

முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் இருந்து மிக பிடித்த சில கதைகளை பகிர்ந்து கொள்கின்றேன்."An Astrologer's day",ஊரை விட்டு ஓடி வந்து பிழைக்க வழி இல்லாது ஜோசியகாரனாய் வேடம் தரித்து நடைபாதையில் கடை விரித்திருக்கும் நாயகனின் ஒரு நாள் பொழுதினை விவரிக்கும் கதை.ஜோசியம் கேட்கவந்தவனை கவர அவன் சொல்லும் ஒரே மாதிரியான குறிப்புகள்,அலுப்பில்லாமல் சொல்லும் பொய்கள் நகைப்பிற்குரியதாய் இருப்பினும் அவனின் தினக்கூலி அவன் நடிப்பின் சிறப்பை பொறுத்தே!!"Tiger's Claw",புலியுடன் தான் நிகழ்த்திய சாகச நிகழ்வை கிராமத்து சிறார்களுக்கு விளக்கும் ஒரு வீரனின் கதை."Leela's Friend", திருடனாய் இருந்து திருந்திய ஒருவனோடான ஒரு குழந்தையின் உறவை/நட்பை விளக்கும் கதை.

"Missing Mail", வெயிலும்,மழையும் பாராது சைக்கிளில் அலைந்து தபால் பட்டுவாடா செய்யும் தபால்காரர்களிடம் உற்சாகாதையோ,சீரான நட்பையோ எளிதில் கண்டு பெற்றுவிட முடியாது.பொதுவான இந்த குணத்திற்கு மாறாக இக்கதையின் நாயகன் எல்லோரிடத்திலும் பேரன்போடு, பொதுவான காரியங்களை பகிர்ந்துகொள்வதோடு துன்ப பொழுதில் உதவும் உற்ற நண்பனாகவும் சித்தரிக்கபட்டுள்ளார்.மேலும் "Mother and a Son","Shadow","Ishwaran","Wife's Holiday" ஆகிய கதைகளும் சிறந்தவையே.மால்குடி கற்பனை கிராமமாய் இருந்தாலும்,அதன் சூழலும்,மனிதர்களும் எல்லா இந்திய கிராமங்களுக்கும் பொதுவானவையே..

வெளியீடு - Indian Thoughts Publications

விலை - 110 ரூபாய்

Wednesday, May 13, 2009

தோப்பில் முகமது மீரானின் "ஒரு கடலோர கிராமத்தின் கதை"



மிகச்சமீபத்தில் நான் படித்து மகிழ்ந்த நாவல் தோப்பில் முகமது மிரான் எழுதிய ஒரு கடலோர கிராமத்தின் கதை.தலைப்பை கொண்டு கடல் சார்ந்த மீனவர்களின் கதையாக இருக்கக்கூடும் என எண்ணியே நாவலை வாசிக்க தொடங்கினேன்.அதற்கு முற்றிலும் மாறாக கதை பயணிக்க தொடங்கியது.கடலோர கிராமத்தின் கதை வாழ்ந்து மறைந்த ஒரு தலைமுறையின் சரித்திரம்..

ஓர் இஸ்லாமிய கிராமத்தின் ஓர் தலைமுறை நிகழ்வை நம் கண் முன்னே காட்சிகளாய் பதிவு செய்துள்ளார் முகமது மிரான்.தேவையற்ற காட்சிகளையும் உரையாடல்களையும் புகுத்தாமல் கதை தன் போக்கில் செல்கிறது.. காதல்,கோபம்,வன்மம்,பொறாமை,பழிவாங்கல்,அறியாமை என யாவும் மிகை இல்லாமல் கூறப்படுகின்றது.நாவலில் முக்கியமாக குறிப்பிட படவேண்டிய ஒன்று கதை மாந்தர்கள் பேசும் வட்டார தமிழ் மற்றும் உருது கலந்த உரையாடல்கள்.பிற சமய வாசிபாளர்களுக்கு அது ஒரு முற்றிலும் புதிய,இனிய அனுபவம்.

சுதந்திரத்திற்கு முன் நிகழும் இக்கதை,மேல் ஜாதி கீழ் ஜாதி வேற்றுமைகள் எல்லா மதத்திலும் உள்ளதே என்பதை தீவிரமாய் உணர்த்துகிறது.மேலும் உயர் ஜாதி வீட்டோர் தம் சுயநலத்திற்காக ஏழைகள் மீது காட்டும் வன்மம்,அக்காலத்தில் அவங்களுக்கு இருந்த மதிப்பு,அதிகாரம்...எல்லா விதத்திலும் துன்ப பட்ட பிறகும் அவர்களுக்குள் இருக்கும் தீராத ஆணவம் என யாவற்றையும் கிராமிய சூழலுடன் ஆசிரியர் விவரித்துள்ள விதம் நேர்த்தி.நாவலில் பெரும் பகுதி மசூதியில் நிகழ்வதாய் உள்ளது.தொழுகை அம்மக்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றென உள்ளது.அங்கும் கீழ் ஜாதியினர் தனி இடத்தில் அமர விதிக்கப்பட்டுள்ளனர்.அஹமது என்னும் பாத்திரத்தின் வழியாக இத்தகைய வேற்றுமைகளை கடுமையாய் சாடியுள்ளார் ஆசிரியர்.

நாவலின் பிற்பகுதியில் அக்கிராமத்தில் ஆங்கில அரசு பள்ளிகூடம் தொடங்க அதை கிராமமே எதிர்ப்பதும் எல்லா வழியிலும் பள்ளியை நடத்தும் ஆசிரியருக்கு இடையூறு விளைவிப்பதும் அக்காலத்தில் நடக்க கூடிய நிதர்சனமே.. கதையில் நாயகன்,நாயகி என்று யாரும் இல்லை...கடலோர கிராமத்தின் மாந்தர்கள் யாவரும் கதை நாயகர்களே.மொத்தத்தில் இந்நாவல் முற்றிலும் ஒரு புதிய வாசிப்பு அனுபவம்

Wednesday, May 6, 2009

அழகிய பெரியவனின் " தகப்பன் கொடி"

பெருமாள் முருகனின் "கூள மாதாரி",இமயத்தின் "கோவேறு கழுதைகள்",பாமாவின் "கருக்கு' வரிசையில் தமிழில் மற்றும் ஒரு சிறந்த தலித் நாவல் "தகப்பன் கொடி".இந்நாவலுக்கு அழகிய பெரியவன் எழுதியுள்ள முன்னுரை தலைமுறை தலைமுறையாய் மாற்றங்கள் ஏதும் காணாது ஒடுக்கப்பட்டு வரும் தலித் மக்களின் வாழ்க்கையை அழுத்தமாய் பதிவுசெய்கின்றது.நமது முந்தைய தலைமுறை குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வமும் ஆசையும் இயல்பானது.பாட்டன் காலத்து கதைகள் கேட்பதற்கு ஏதோ வேறு உலகில் நிகழ்தனவாய் தோன்றும்,கால மாற்றங்கள் வாழ்க்கை முறைகளில் ஏற்படுத்தி உள்ள வித்தியாசத்தை எண்ணி வியந்திடாமல் இருக்க முடியாது.



அழகிய பெரியவனின் இந்த நாவல் மூன்று தலைமுறை பற்றியது.அம்மாசி அவனின் தந்தை மற்றும் அவனின் மகன்கள் என ஒவ்வொரு தலைமுறையிலும் நிகழும் மாற்றங்கள் மிகை இன்றி நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.பண்ணை கூலிகளாய் இருக்கும் அம்மாசி,அபரஞ்சி தம்பதியர்கள் பண்ணையாரிடம் தங்களின் நிலத்தை இழந்து அபரஞ்சியின் ஊருக்கு பிழைக்க செல்கின்றனர்.நிலத்தில் அல்லும் பகலும் உழைத்து பழகிய அம்மாசிக்கு அவ்வூரும்,அங்கு செய்ய நேரும் தோல் தொழிற்சாலை வேலையும் புதிதாய் இருக்க..புதிய புதிய நட்புகள்,அரசியல் பேசும் தொழிலாளர்கள்,வண்ண திரைப்படங்கள் காட்டும் கொட்டகைகளும் என நகர சூழல் மெதுவாய் அவனுக்கு பழகிவிடுகின்றது.

அம்மாசியை முன்னிறுத்தி சுழலும் கதை அவனுக்கு பிரியமான தெருக் கூத்தை விஸ்தாரமாய் அலசுகின்றது.அர்ஜுனன் கூத்தில் அம்மாசி அர்ஜுனனை வேடம் தரித்து இராப்பொழுதொன்றில் கூத்து கட்டும் காட்சிகளின் விவரிப்பு எதையோ நாம் இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மீண்டும் நினைவூட்டுவதாய் உள்ளது.தோல்பாவை கூத்து,தெருகூத்து,ஒயிலாட்டம்,கரகம் என மெல்ல அழிந்து வரும் கலைகள் பல.அடுத்த தலைமுறைக்கு படம் காட்டி விளக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.மேலும் துப்பாக்கி கொண்டு தூரத்து மலையில் கட்டி இருக்கும் ஆட்டை சுடும் கிராமங்களுக்கு இடையே நடக்கும் விளையாட்டு குறித்த செய்தி புதிதாய் இருந்தது.

நாவலில் சோகம் படர தொடங்குவது அபரஞ்சியின் மரணத்திற்கு பிறகு..தனது இரு மகன்களும் படித்து உருப்பட நினைத்த அம்மாசியின் எண்ணம் நிறைவேறாது அவன் கனவிலும் நினைத்திடா பாதைகளில் அவர்கள் தம் வாழ்வை அமைத்து கொள்கின்றனர். இக்கதையில் தலைமுறை இடைவெளியை அழகாய் சொன்னதோடு அந்தந்த தலைமுறையின் மாற்றங்களை இயல்பாய் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பெற்றவர்களாய் இக்கதை மாந்தர்கள் உள்ளனர்.விளிம்பு நிலை குறித்த இலக்கியமாய் இருப்பினும் நெஞ்சை பிழியும் சோகம் எதுவும் இன்றி வெகு இயல்பாய்,அதன் போக்கில் கதையை சொல்லி இருக்கும் விதம் அருமை.

வெளியீடு - தமிழினி
விலை - 65 ரூபாய்

Monday, May 4, 2009

யுவன் சந்திரசேகரின் "ஏற்கனவே" - சிறுகதை தொகுப்பு

யுவனின் முந்தைய படைப்புகளான 'குள்ள சித்தன் சரித்திரம்' மற்றும் 'ஒளி விலகல்' ஏற்படுத்திய ஆவல் இந்த சிறுகதை தொகுப்பை படிக்க தூண்டியது.எனினும் இத்தொகுப்பு முன்னவற்றை போல முழுக்க முழுக்க மாய உலகத்தில் பயணிக்காது எல்லா வகை கதைகளின் கலவையே.

"மீகாமரே மீகாமரே" சிறுகதை சிந்துபாத் பயண கதைகளில் வருவது போன்றதொரு புனைவு.ஆள் இல்லாத நடுத்தீவோன்றில் தனியே மாட்டிக்கொள்ளும் மீனவனிற்கு துணையாய் வந்து சேர்கிறாள் கடல் மோகினி,பெண்ணுடல் பாதியும் மீனுடல் பாதியுமாய் இருக்கும் அவளோடு கழித்த நாட்களை பிறிதொரு நாளில் நினைத்து பார்க்கிறான்.கடலும்,காற்றும் தவிர்த்து இருவரும் பொதுவாய் அறிந்திருந்த விஷயங்கள் ஏதும் இல்லாததினால் ஒவ்வொரு பொழுதும் புதிதாய் அதிசயங்கள் பல கூட காதலோடு கழிகின்றது."மூன்று ஜாமங்களின் கதை" - பெரும்பாலான கதைகளில் யுவன் தன் தந்தையை பற்றி குறிப்பிடுவது உண்டு.சில உறவுகளோடான பிரிய தருணங்கள் மறக்க இயலாதவை.இக்கதை தம் தந்தை குறித்த மூவரின் பகிர்தல்.

கதை சொல்லுவதில் தேர்ந்த நபர்கள் குடும்பத்தில் ஒருவரேனும் இருப்பர்.எங்கள் குடும்பத்தில் அப்படி யாரும் இல்லாததால் என்னவோ குழந்தைகளுக்கு கதை சொல்ல மிகுந்த விருப்பம் உண்டு எனக்கு.ஒரு வேடுவன் கதையை எங்கோ தொடங்கி,விசித்திர முடிச்சுக்கள் போட்டு,ஆவல் கூட்டி எங்கோ கதையை செலுத்தி சிறுவர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்த தன் சித்தப்பாவை குறித்த யுவனின் பகிர்தல் "காற்புள்ளி"."தெரிந்தவர்" -எங்கோ பார்த்த முகமாய் யாரேனும் எதிர்பட்டால் அந்நாள் முழுதும் அது பற்றி சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்,அது போன்றதொரு அனுபவத்தை பகிரும் கதை.

வண்ணதாசனின் "கடைசியாய் தெரிந்தவர்கள்" சிறுகதையை ஞாபகம்படுத்திய கதை 'வருகை'. எதிர்பாராது எதிர்படும் சிலரின் முகங்கள் தொலைந்து போன நட்பையோ,காதலையோ நினைவுபடுத்துவது இயல்பு.மருத்துவமனைஒன்றில் நாயகன் சந்திக்கும் நோயாளி அவனை தனது பள்ளி நண்பன் என நினைத்து ,ஏதோ ஒரு பெண்ணை குறித்து ஆவலாய் விசாரிப்பது தெரிந்து அவனை ஏமாற்றம் கொள்ள செய்யாது ஏதோ ஒரு பதிலை சொல்லி முகமற்ற அந்த நண்பனாய் இடத்தை சில நிமிடங்கள் நடித்து விடைபெறுவதாய் வரும் அக்கதை."ஏற்கனவே" - அசல் யுவன் பாணி சிறுகதை.தொடரும் நிகழ்ச்சிகள் யாவும் ஏற்கனவே நடந்துவிட்டதாய் பிரேமை கொள்ளும் நாயகன் அது குறித்து அறிய எடுக்கும் முயற்சியும் அதன் விபரீத முடிவுமே இக்கதை.

வெளியீடு - உயிர்மை
விலை - 100 ரூபாய்