Wednesday, August 18, 2010

சூர்ப்பனகை - மலையாள மொழிபெயர்ப்பு

"எந்த கழிவிரக்கத்தையும் கோராமல்,படித்து முடித்த பின் ஒரு பெண் மருத்துவரின் அறைக்குறிப்புகள் போலல்லாமல் நிதர்சனமாக முழுச் சுதந்திரதோடும் மேன்மையாகவும் வாழ ஆசை படும் பெண்களில் இரண்டு சதவிகித பேர் தவிர மீதமிருக்கும் பெண்களின் நிலை தான் மீராவின் கதாபாத்திரங்கள்"

- ஷைலஜா


மலையாள எழுத்தாளர் மீராவின் பெண்ணிய சிறுகதைகளின் தொகுப்பிது.பெண்ணியம் பேசி புரட்சிகர சிந்தனை கொண்ட பெண்கள் குறித்தான கதைகள் அல்ல இவை.அன்றாட சிக்கல்களில் இருந்து வெளிவர முயன்று தோற்கும் எதார்த்த பெண்கள் குறித்தான பதிவுகள்.பெண்களின் அகவுலகை வெகு நேர்த்தியாய் பகிரும் இக்கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாய் உணர செய்தன.



"செய்திகளின் நாற்றம்",பரவலாய் கவனம் பெற்ற இச்சிறுகதையை ஏற்கனவே படித்த ஞாபகம்.பத்திரிக்கை ஒன்றில் மரண செய்தி பிரிவில் எடிட்டராய் இருப்பவளின் அன்றாடம் அச்செய்திகளை போலவே சோகம் திணிக்கப்பட்டு நகர்வதை சொல்லும் சிறுகதை.எத்தனை அலுப்பு தரும் வேலை அது.இரவும் பகலும் மரண செய்திகளுக்காய் காத்திருக்கும் நாயகி மரணத்தின் நாற்றத்திற்கு தன்னை பழக்கப்படுத்தி கொண்டு முழுதுமாய் அதில் தோய்ந்து போகின்றாள்.மரண செய்திகளின் ஊடாய் கழியும் அவளின் தின பொழுதுகள் கணவனையும்,குழந்தையையும் கூட இரண்டாம் பட்சமாக்கி அவளை ஆட்டுவிக்கின்றது.உயிரற்ற அம்மனிதர்களும்,கல்லறை தோட்டத்து வசனங்களுமே அவளுக்கு நித்ய துணையாகி போகின்றன.அழுத்தம் நிறைந்த அவளின் மன உணர்வுகளுக்கு வெகு அருகில் சென்று வந்தது போன்ற அனுபவம் தேர்ந்த மொழிபெயர்ப்பினால் சாத்தியமாகின்றது.


"இருப்பினும் வேட்டைகாரனும்,பறவையும் ஒரே வலையில் மாட்டி கொள்வதுதான் திருமணம் என்பதை அவர்கள் சீக்கிரமே புரிந்து கொண்டார்கள்"

"அர்த்த ராத்திரிகளின் அலறல்" மற்றும் "இதயம் நம்மை ஆதரிக்கின்றது" ஆகிய சிறுகதைகள் நவீன வாழ்க்கை முறையில் பொருந்தி போக இயலாமல் அலைபாயும் நடுத்தர குடும்பத்து பெண்களை பகடி செய்யும் கதைகள்.குடும்ப பெண்களுக்கே உண்டான பொதுவான சாபங்களை தாண்டி வர இயலாத இயலாமையை நகைச்சுவை சாயம் பூசி பகிர்கின்றன இக்கதைகள்."இறந்தவளின் கல்யாணம்",கைகூடா காதலும்,மறுக்கபடும் வாழ்கையும் ஆதிவாசி பெண்ணொருத்தியை தற்கொலைக்கு இட்டு செல்லும் அவலத்தை,அதன் தொடர்ச்சியாய் நிகழும் ஆதிவாசிகளின் சடங்குகளையும் அவள் விரும்பியவனின் நினைவுகள் கொண்டு பகிர்கின்றது.அவள் தோற்றம் குறித்த விவரிப்புகள் அவளின் இலக்கிய ரசனையின் முன்பு யாதுமற்று போகின்றன. காதலின் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் இக்கதை நாயகி ஒடுக்கப்படும் சமூக பெண்களின் மற்றுமொரு குறியீடு.

இத்தொகுப்பில் மற்றொரு குறிப்பிட தகுந்த கதை "மோக மஞ்சள்".மருத்துவமனையில் சந்திக்க நேரும் திருமணமான நடுத்தர வயது ஆணிற்கும்,விதவை பெண்ணிற்குமான ஒரு நாள் உறவை கற்பு,புனிதம் இத்யாதிகள் கொண்டு பூசி மொழுகாது எதார்த்த நிலை கொண்டு புரிய வைக்கும் கதை.சந்தோஷத்திற்கான எல்லா சாத்தியங்களும் மறுத்தளிக்கபட்ட நிலையில் அவள் கொள்ளும் அந்த நேசமும் மரணத்தின் துணை கொண்டு கரைந்து போவது பெரும் சோகம்.தொடரும் வீழ்ச்சிகளின் இருந்து விடுபட பிரியத்தை எதிர்நோக்கி காத்திருந்து தோற்கும் சராசரி பெண்களை குறித்த கதைகள் இவை.பளிச்சிடும் பல வரிகள்..அத்தனை எளிதாய் கடந்து போகவிடாது செய்கின்றன,நேர்த்தியான மொழிபெயர்ப்பு.முன்னுரையில் பகிரப்படும் இந்த கவிதையில் எல்லாமும் சொல்லபடுகின்றது.

அளவாய் செதுக்கப்பட்ட
கண்ணாடி தொட்டிக்குள்
கம்பீரமாய் நீந்தி விளையாடுகிறேன்
தினம் தினம் அக்கறையோடு
சுத்தம் செய்யபடும் தண்ணீர்.
பதப்படுத்தப்பட்ட செடி கொடிகள்
தேடி அலையாமல் வாய்க்குள்
வந்து விழும் உணவு
தேவையை சரியாய் புரிந்து கொண்டு
அளிக்கப்படும் பொழுதுபோக்குகள்
என் இருத்தல் பார்ப்பவர்களுக்கு
நான் கொடுக்கும் சந்தோசம்
அழகாய் வளைந்து நெளிந்து
பொன்னிறத்தில் மின்னி
வாலசைத்து தலையசைத்து
சந்தோசம் காட்டுவதாய்
எல்லா சுதந்திரங்களோடும்
எவ்வித சுதந்திரமுமின்றி


ஆசிரியர் - கெ.ஆர்.மீரா
தமிழில் - கே.வி.ஷைலஜா
வெளியீடு - வம்சி
விலை - 50 ரூபாய்

Monday, August 9, 2010

வண்ணதாசனின் "கடைசியாய் தெரிந்தவர்" - சிறுகதை

"அவரது படைப்புலகம் கருணையும் சௌந்தர்யமும் கலந்தது"

- வண்ணநிலவன்

அன்பென்னும் ஒற்றை புள்ளியை சுற்றி கட்டமைக்கபட்டதாகவே இருக்கின்றது வண்ணதாசனின் கதையுலகம்.தொடர்ந்து அவ்வெழுத்தின் மீதான பிரியம் அதிகரித்து வரவும் அது ஒன்றே காரணம்."கடைசியாய் தெரிந்தவர்",மருத்துவமனையில் நண்பனின் குழந்தைக்காக உடன் இருக்கும் நாயகனின் பார்வையில்,அந்நாட்கள் பகிரப்படுவதான கதை.மருத்துவமனையில் இரவு தங்கலும்,அந்த அசாதாரண சூழ்நிலை தரும் தயக்கங்களும், அச்சமும்,நோயாளி சமநிலை வரும்வரை கொள்ளும் மன உளைச்சலும் வார்த்தைகளில் அடக்கிட முடியாதவை.பிரியத்திற்குரிய உறவுகளுக்காக மருத்துவமனையில் செலவிட்ட நாட்கள்,நினைவேட்டில் நிரந்தரமாய் மறைத்து வைக்க வேண்டியவை.அதிலும் முக்கியமாய் மருத்துவமனை இரவு தங்கள்,அமானுஷ்ய உணர்வை தந்து இம்சிக்கும் அனுபவம் அது.ஏதோ ஒரு நம்பிக்கை அந்த கணங்களை கடக்க அவசியம் ஆகின்றது.

"இந்த தைரியம் தான் மறுபடி மறுபடி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஆஸ்பத்திரியை நோக்கி யாருடனாவது என்னை செலுத்தி கொண்டிருக்கின்றது"





குறுகலான அந்த பாலி கிளினிக்கின் காட்சிகளை விவரிப்பதோடு தொடங்கும் சிறுகதை.மெல்ல மெல்ல மருத்துவமனையின் அன்றாட காட்சிகளை விரிவாய் பகிர்கின்றது.நோயுற்று இருப்பவரின் உடன் இருப்பவர்கள் நோயாளி தேறியவுடன் கொள்ளும் மனநிலையை கீழ் உள்ள வரிகள் சிறப்பாய் விவரிக்கின்றன,

"பக்கத்துக்கு அரைப் படுக்கைகாரரிடம் வழிய போய் பேசுவார்கள்.அனுதாபம் கொள்வார்கள்.."டூட்டி முடிந்து விட்டதா சிஸ்டர்?" என நர்சிடம் விசாபார்கள்"............"நாம் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் கவனித்திருந்த நோயாளியின் உடல்நலம் தேறிவிட்டது என்று"

நண்பனின் குழந்தைக்காய் இரவும் பகலும் அத்தம்பதியினருடன் உடனிருக்கும் நாயகன்,குழந்தையின் உடல் நிலை தேறியதும் நண்பனின் மனைவி கொள்ளும் மாற்றத்தை உணர்ந்து கொள்ளும் தருணம் நெகிழ்ச்சியானது.நண்பன் மற்றும் அவனது மனைவியின் அசாதாரண சூழலுக்குள் தன்னையும் பொருத்தி கொண்டு மருத்துவமனையில் உலாவரும் நாயகனின் பார்வையில் விரியும் இச்சிறுகதை ஒழுங்கற்ற அந்நாட்களை நுட்பமாய் பகிர்கின்றது.

இச்சிறுகதையின் கடைசி பகுதி இன்னும் அழுத்தமானது.முன்பின் அறிமுகம் அற்ற நபர்களிடம் வேறு ஒரு பெயர் கொண்டு நிற்பது சுவாரஸ்யத்தை மீறிய ஒரு சங்கடம்.பக்கத்துக்கு அறையில் இருக்கும் கபீர் என்னும் நோயாளி தன்னை வேறொரு சங்கரலிங்கம் என கருதி நலம் விசாரித்து யாரோ ஒரு பெண்ணை குறித்து "வசந்தா இப்போ எங்கே இருக்கா?" என ஆர்வமாய் கேட்கின்றான்,அந்த கேள்வியின் துரத்தலின் பொருட்டே அவன் தன்னை அணுகி இருக்கின்றான் என அறிந்து "ஜபல்பூரிலே.." சொல்லி வெளியேறுகிறான் நாயகன்.

"எனக்கு ஜபல்பூர் தெரியாது.வாய்க்காலடி வீட்டுச் சங்கரலிங்கம் தெரியாது.......சில மனுஷர்களோடு இப்போது கடைசியாய் இந்த கபீரையும் தெரியும்" என முடிகின்றது இச்சிறுகதை.

திடிரென யாவும் கலைந்து போனதாய் மாறிவிடும் சூழலில்,அன்றாடங்களை ஒதுக்கி விட்டு மொத்தமாய் நோயாளியின் மீது கவனத்தை குவித்து..இரவும் பகலும் அலுக்காமல் உடன் இருந்து கவனிக்க செய்வது எது?அன்பு ஆச்சர்யங்கள் நிறைந்தது,இயல்புலகம் மாறி போகும் தருணத்தில் அது அதிகமாய் உணரப்படுகின்றது.மனித உறவுகள் அற்புதமானவை என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் எழுத்து வண்ணதாசனுடையது.

இவ்வேளையில் எஸ்.ராவின் "பி.விஜயலக்ஷ்மியின் சிகிச்சை குறிப்புகள்" சிறுகதையை குறிப்பிட வேண்டும்.வண்ணதாசனின் சிறுகதை எத்தனை மென்மையாய் மருத்துவமனை நாட்களை பகிர்கின்றதோ அதற்கு நேரெதிராய் எஸ்.ரா தன சிறுகதையில் உறவுகளால் கைவிட பட்ட ஒரு பெண்ணின் மோசமான மருத்துவமனை நாட்கள் குறித்து பகிர்கின்றார்.மனநடுக்கம் கொள்ள செய்யும் விஜயலக்ஷ்மியின் கடந்த கால குறிப்புக்கள் தரும் அதிர்ச்சியில் இருந்து எளிதில் மீள முடியாது.இவ்விரு கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் என்னை வெகுவாய் பாதித்தவை,பிரியமானவர்களுக்காய் மருத்துவமனை நாட்களை கடந்து வந்த எவர்க்கும்.

வண்ணதாசன் கதைகள்
வெளியீடு - புதுமைப்பித்தன் பதிப்பகம்
விலை - 350 ரூபாய்

Saturday, August 7, 2010

கவிஞர் மீரா நினைவஞ்சலி கவிதை கண்காட்சி

Sunday, August 1, 2010

மஜித் மஜிதியின் "பெடார்"



துரோகங்கள் தான் எத்தனை வகை..ஒரு சிறுவனின் உலகினுக்குள் அது நிகழும் பொழுது எழும் சொல்லவியலா மனப் போராட்டத்தை நேர்த்தியாய் வடித்திருக்கும் படம் "பெடார்"(Father).சாலை விபத்தொன்றில் தந்தையை இழக்கும் சிறுவன் மெஹருல்லா தன் தாயையும்,தங்கைகளையும் காப்பாற்ற கிராமத்தை விட்டு பெருநகர் ஒன்றிற்கு பணிக்கு செல்கின்றான்.திரும்பி வரும் ஒரு நாளில்,நண்பன் லத்தீப்பின் மூலம் தனது தாய் மறுமணம் செய்து கொண்டதை அறிந்து அதிர்கின்றான்.பணத்தின் பொருட்டே தாய் அவ்வாறு செய்திருக்க கூடும் என எண்ணி அவள் மீதும்,அவள் மணம் புரிந்துள்ள போலீஸ் அதிகாரியான புதிய தகப்பனின் மீதும் கோவமும்..வன்மமும் கொள்ளும் மெஹருல்லா நண்பன் லத்தீப்பின் துணை கொண்டு சிறுபிள்ளைதனத்தோடு தனது எதிர்ப்பினை காட்டுகின்றான்.

மெஹருல்லா மற்றும் லத்தீப்பாக நடித்துள்ள சிறுவர்களின் நடிப்பு அபாரம்.முக்கியமாய் மெஹருல்லாவாக நடித்துள்ள ஹசன் சதேகி,இறுக்கமான முகத்தோடு..துரோகத்தின் வலியை வெளிக்காட்டாது,பிடிவாதாமான மனநிலையை ஒரு காட்சியிலும் தவறவிடாது நடித்துள்ளது வெகுநேர்த்தி.இச்சிறுவனின் நடிப்பிற்காகவே படத்தை மறுமுறை பார்க்கலாம். லத்தீப்பாக "பாரான்" திரைப்படத்தின் நாயகன்.அதே வெகுளி சிரிப்போடு ஒரு கிராமத்து சிறுவனை கண் முன் நிறுத்துகின்றான்.நண்பனுக்காய் ஓடி ஓடி உதவுவதாகட்டும்,பின்பு பயந்து பதறுவதாகட்டும் மறக்கவியலா நடிப்பு.சில முகங்கள் காரணம் அற்று பிடித்து போய்விடுவதுண்டு இவனது போல.

தாயோடு சேராது,தனது பூர்வீக வீட்டை லத்தீப்பின் உதவி கொண்டு புதுப்பித்து அதில் தங்கைகளை கடத்தி வந்து வைத்து கொள்ளும் மெஹருல்லா,அவர்களை தேடி வரும் தந்தையிடம் பேசாது தன் கோபத்தை மௌனத்தால் வெளிக்காட்டுவது,மறுமணம் செய்து கொண்டது,பணத்திற்காக தானே எனக்கூறி தாயிடம் பணத்தை வீசி எறிந்து வாதிட்டு அடிவாங்குவது,தங்கைகளை மடியில் அமர்த்தி கொஞ்சுவது,பெருமழைநாளில் அவர்கள் வீட்டில் கல்லெறிந்து,தோட்டத்தை நாசம் செய்வது என முன்பாதி காட்சிகள் யாவும் மெஹருல்லா அவன் குடும்பத்தின் மீதி கொண்டிருக்கும் அளவற்ற பிரியத்தை,இறந்த தன் தந்தையின் இடத்தை வேறொருவர் இட்டு நிரப்ப இயலும் என்பதில் சமரசம் செய்து கொள்ளாத மனநிலையை உணர்ந்திட போதுமானாதாய் இருக்கின்றன.



மெஹருல்லா தனது புது தந்தையிடம் கொண்டிருக்கும் கோவமும்,வன்மமும் அர்த்தமற்றது என்பது அவரை அறிமுகம் செய்யும் (லத்தீப்பின் தங்கைகளை மடியில் அமர்த்தி உணவு உண்ணும் காட்சி) முதல் காட்சியிலேயே உணர்த்தபடுகின்றது.அந்த முரட்டு சிறுவனின் கோவத்திற்கு ஈடு கொடுக்க இயலாது மன உளைச்சல் கொள்ளும் தருணங்களை,உணர்ச்சி குவியலாய் வெகு நேர்த்தியாய் வெளிக்கொணர்ந்திருக்கின்றார் தந்தையாய் நடித்துள்ள முஹமத் கசெப்.மேஹருல்லாவின் தாயை அவர் மணம் முடித்து,அவளின் குழந்தைகள் குறித்தும்,அவர்களின் எதிர்காலம் குறித்தும் மகிழ்ச்சியோடு அவர் உரையாடும் ப்ளாஷ் பேக் காட்சி நெகிழ்ச்சியானது.போலீஸ் அதிகாரியான இவரிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து கொண்டு மீண்டும் நகரத்திற்கு ஓடிவிடும் மெஹருல்லாவை தேடி இவர் மேற்கொள்ளும் பயணத்துக்கு பிறகான காட்சிகள் முக்கியமானவை.

மோட்டார் சைக்கிளிலே நகரத்திற்கு சென்று அங்கு மெஹருல்லாவை தேடி பிடித்து,விலங்கிட்டு தம்மோடு கிராமத்திற்கு அழைத்து வருகின்றார்..சுட்டெரிக்கும் வெயிலில்,நேர் எதிர் மனநிலைகொண்ட இருவர் முகம் பார்த்து பேச விருப்பமின்றி மேற்கொள்ளும் பயணம்.....எதிர்பாரா விதமாய் மோட்டார் சைக்கிள் கோளாறினால் ஆள் இல்லா பாலைவனத்தில் இருவரையும் தனிமைபடுத்தி அவர்களுக்குள்ளான இறுக்கத்தை மெல்ல மெல்ல விடுவிக்கின்றது.சேருமிடம் தெரியாது பாலைவனம் எங்கும் இருவரும் அலைந்து திரியும் சமயம் அதீத உடல் சோர்வினால் மெஹருல்லாவை தன்னை விட்டுவிட்டு போகும்படி நிற்பந்திக்கும் தந்தையை விட்டு விலகாது நீர்நிலை கண்டடைந்து அவரை இழுத்து சென்று நீர் அருந்த செய்யும் மெஹருல்லா,அவர் மீதான நேசத்தை உணரும் அற்புத கணத்தோடு முடிகின்றது திரைப்படம்!!

தாய்,தந்தை இருவருக்குமான பிரியங்கள் எவரோடும் பகிர்ந்து கொள்ள கூடியதில்லை.......அவர்களுக்கு மட்டுமேயானது ..!!அவ்வகை பிரியத்தை வேறொருவரோடு பகிரும்படியான சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகும் ஒரு சிறுவன் கொள்ளும் உணர்ச்சி போராட்டத்தை நுட்பமாய் பகிர்கின்றது இத்திரைப்படம்.