Wednesday, February 26, 2014

INTO THE WILD (2007)

"I read somewhere... how important it is in life not necessarily to be strong, but to feel strong... to measure yourself at least once.” - Jon Krakauer, Into the Wild



I wish I were a Gypsy எனக் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அது சாத்தியமற்ற பெருங்கனவு என்பதையும் நன்கு அறிவேன்.

குடும்பம்,அலுவல்,தினசரி கடமைகள் என யாவற்றையும் துறந்து தேடல்,தேடல் என ஒரு இளைஞன் மேற்கொள்ளும் பயணங்களின் தொகுப்பு இத்திரைப்படம்.பயணங்கள் வழி அவன் சந்திக்கும் மனிதர்கள்,அவர்களோடு கூடிய உரையாடல்கள்,அவர்கள் அன்பில் தேங்கி நின்று விடாமல், விடைபெற்று தொடரும் அவனின் சாகச வாழ்க்கை...என் கனவை எவனோ வாழ்ந்து தீர்த்துள்ளான் என்கிற திருப்தி.இது உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு உருவாக்கப் பட்ட திரைப்படம்.இதுவே காட்சிகளுக்கு இன்னும் அழுத்தம் கூட்டுகின்றது.

வேரோடு முற்றிலும் தன்னை உறவுகளிடம் இருந்து துண்டித்துக் கொண்டு தேசாந்திரியாக அவன் மேற்கொள்ளும் பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்கள் யாவரும் அன்பைப் பற்றிக் கொண்டவர்கள்.அவர்களிடம் கேட்கவும்,பெறவும் ஏராள கதைகள் இருந்தன..மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் அவர்களிடமிருந்து புதுப்புது தொழில்களை கற்றுக் கொள்கிறான்."Career is the Invention of 20th Century' என்னும் அவனின் நிலைப்பாடு எத்தனை உண்மையானது. நிகழும் எல்லா சம்பவங்களுக்கும் தான் வாசித்த புத்தகங்களில் இருந்து மேற்கோள் காட்டிட அவனால் முடியும் என்கிறாள் அவன் சகோதரி.புத்தகப்பித்துகளுக்கு தெரியும் இதன் முழு அர்த்தம்.

மேலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவொன்று,அழுத்தமான வசனங்கள்.வாசிக்கும் புத்தகத்தில் மிகப் பிடித்த வரிகளை பென்சிலில் அடிக்கோடிட்டு கொண்டே வருவதை போல.. இப்படத்தின் வசனங்களை கவனமாய் குறித்துக் கொண்டேன். அத்தனையும் வாழ்க்கைப் பாடங்கள். பெற்றோர்களின் பொறுப்பு,மெய் வாழ்வின் தேடல்,Survival of the fittest என ஒன்றிற்கும் மேற்பட்ட படங்களில் தனித் தனியே சொல்லக் கூடிய விஷயங்களை திகட்டாமல்,நேர்த்தியாய் சொன்ன விதத்தில் இந்தப் படம் தனித்து தெரிகிறது.

பயணங்களும்,புத்தகங்களும் உங்களுக்கு பிடிக்குமாயின் இந்தத் திரைப்படம் உங்களுக்கானது..#MustWatch

Wednesday, February 12, 2014

அடூரின் எலிப்பத்தாயம் (1981)

கேளிக்கைகளும்,கொண்டாட்டங்களும் கொண்ட வாழ்க்கையை கனவிலும் கண்டிராத ஒரு குடும்பத்து மனிதர்களை குறித்த பதிவு.அதன் பொருட்டு அழுது,அரற்றி சோகத்தை பிழியும் திரைப்படம் இல்லை இது.மாறாக சூழ்நிலை கைதியாகிப் போன பெண்ணொருத்தியை மையமாகக் கொண்டு ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளை நுட்பமாய் விவரிக்கின்றது.

குடும்பத்தின் வீழ்ச்சியை சட்டை செய்யாத,தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள இயலாத உன்னி,கல்லூரி காலத்திற்கே உரிய கனவுகளோடு கற்பனை உலகில் மயங்கிக் கிடக்கும் ஸ்ரீதேவி, வீட்டுச் சுமையோடு,எந்நேரமும் அடுப்பங்கரையில் உழன்று கொண்டிருந்தாலும் மாறாத அன்போடு மற்ற இருவரையும் கவனித்துக் கொள்ளும் முதிர்கன்னி ராஜம்மா - இவர்களை சுற்றி நடக்கும் கதை.ராஜம்மாவாக வரும் சாரதாவின் நடிப்பு அசாத்தியம்.நேர்த்தியாக விவரிக்கப்படும் ராஜம்மாவின் பொழுதுகள் அவள் குறித்து அறிந்து கொள்ள போதுமானவை.நாலு பெண்ணுகள் திரைப்படத்தில் வரும் நந்திதாவின் கதாப்பாத்திரம் ராஜம்மாவின் சாயலை கொண்டதே.தன் திருமணத்தை தட்டிக் கழிக்கும் அண்ணன் உன்னியின் மீது அவளுக்கு எந்த வருத்தங்களும் இல்லை,வீட்டு வேலைகளில் உதவாது,அலங்கார மோகம் கொண்டு திரியும் ஸ்ரீதேவியின் மீதும் அவளுக்கு பிரியமே.





தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள மட்டுமே உன்னி தன் உறவுகளை பயன்படுத்திக் கொள்கின்றான். அவனிடமிருந்து பெறுவதற்கு எதுவுமில்லை.பிறர் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே ராஜம்மாவின் வேலை,பரஸ்பர அன்பை பகிர்ந்து கொள்ள அவளுக்கு எவருமில்லை.ஊரில் இருந்து தனித்துவிடப்பட்ட அப்பெரிய வீட்டில்,ஒட்டுதல் இல்லாது இயங்கும் மூவர்.

எந்தவித மாற்றங்களும் காணாமல் தொடரும் அவர்களின் நாட்கள் எதிர்பாராத நாளொன்றில் அஸ்தமிக்கத் தொடங்குகின்றது.அவர்கள் வீட்டிலேயே ஒரு பெரிய எலிப்பத்தாயம் உண்டு.ஒவ்வொரு முறை அதில் சிக்கும் எலியை ஸ்ரீதேவி தூரத்தில் உள்ள குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரில் விடுகிறாள்.உன்னிக்கும்,ராஜம்மாவிற்கும் தெரியாத பிணியில் இருந்து தப்பிக்கும் கலையை அவள் நன்கு அறிந்து வைத்திருக்கிறாள், பின்னாளில் அதுவே அவளை அவ்வீட்டை விட்டு தூரம் போக செய்கின்றது.தீராத நோயின் காரணமாய் ராஜம்மாவும் உருகுலைந்துபோக நேரிடுகிறது.ஸ்ரீ தேவியும்,ராஜம்மாவும் இல்லாது போன வீட்டில் உன்னி எலிப்பத்தாயதிற்குள் சிக்கிய எலியைப் போல செய்வதறியாது திகைந்து வீட்டிற்குள் ஓடி ஒழிவதாக படம் முடிகின்றது.

மழை எந்தவொரு சூழ்நிலைக்கும் கணம் கூட்ட கூடியது. இப்படத்தின் இறுதிக் காட்சிகள் யாவும் மழையின் பின்னணியில் நிகழ்கின்றன.இப்பட கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வண்ணத்தில் உடை அமைத்ததில் உள்ள குறியீட்டை அடூர் தன் நேர்காணல் ஒன்றில் விளக்கியுள்ளார்(நன்றி விக்கி).ராஜம்மாவின் நீல நிற ஆடைகள் அவளின் தனிமையை,உன்னதத் தன்மையை விளக்குவதாக சொல்லியுள்ளார்,Blue Is The Warmest Color அல்லவா

கொஞ்சம் பொறுமையை சோதித்தாலும் அடூரின் திரைப்படங்கள் தரும் நிறைவு அலாதியானது.தொடர்ந்து அவர் திரைப்படங்களை தேடிப் பார்க்க காரணமும் அதுவே.